திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்வது எப்படி ....
திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்:
சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
தக்காளி - 2
இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 100 கிராம்
புதினா இலை - ஒரு கைப்பிடி
பட்டை - 5
கிராம்பு - 5
ஏலக்காய் - 5
மல்லி இலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பால் - ஒரு கப்
ஆட்டுக்கறி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
புளித்த தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும்.
தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புதினா இலை, மல்லி இலை ஆகிய இவை அனைத்தையும் தனித்தனியாக சிறிது நீர் விட்டுக் கெட்டியாக மிக்சியில் மசாலா பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரையில் வேக வைக்கவும்.
ஒரு கனமான வாணலியில் எண்ணெய்யை ஊற்றி எண்ணெய் நன்றாகக் காய்ந்த மாத்திரத்தில் பொடித்து வைத்த ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை போடவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்கு பொன்னிறமாக வரும் வரையில் கிளறவும்.
இப்போது இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை போடவும். பின்னர் நன்றாகக் கிளறவும்.
தக்காளி நன்றாகச் சேர்ந்த மாத்திரத்தில் அரைத்து வைத்த மசாலாக்கள் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கிளறவும். அத்துடன் எண்ணெய் நன்கு பிரியும் வரையில் கிளறவும்.
பின்னர் மேற்கண்ட கலவையுடன் தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.
தேங்காய்ப் பால் நன்றாக மசாலுடன் சேர்ந்தவுடன், மட்டனையும் சேர்க்கவும்.
பின்னர், தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
இப்போது மற்றுமொரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க விட்டு அரிசியை போடவும்.
உப்பை சேர்க்கவும்.
அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வேக வைத்த மசாலில் சேர்க்கவும்.....
சுமார் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடிப் பிடிக்காமல் வைத்துக் கிளறி பின்னர் இறக்கவும்.
சுடச் சுட சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.
இதனை வெங்காய பச்சடி உடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும்.
Comments
Post a Comment